Tuesday, December 7, 2010

மனித நுகர்வும், இயற்கை வள இழப்பும்

மனிதன் நாகரிக வளர்ச்சி அடைய தொடங்கி இன்றைக்கு பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. இந்த வளர்ச்சி என்பது கடந்த 3 நூற்றாண்டுகளில் பல மடங்கு அதிகரித்துள்ளது என்பது உண்மை. அறிவியல் வளர்ச்சியின் தொடக்கம் என்பது 18 நூற்றாண்டின் தொடக்கம் தொட்டு இன்று வரை மனிதன் நினைத்துதிராத அளவு வளர்ந்துவிட்டது. இந்த வளர்ச்சியின் விலை என்ன என்று இன்றுவரை மனிதன் அதிகமாக உணரவில்லை என்பதே உண்மை.

மனித நாகரிக மற்றும் அறிவியல் வளர்ச்சி இயற்கையின் விலையால் (அழிவால்) அமைய பெற்றது என்பதை இன்று நாம் அதிகமாக உணரவில்லை. அறிவியல் வளர்ச்சியின் ஊடாக இன்று நாம் பெற்று உள்ள போக்குவரத்து நிலை என்பது மனிதன் நினைத்த நேரத்தில் வேண்டிய இடத்திற்க்கு நம்மை இட்டு செல்ல முடியும். ஆனால் இந்த வளர்ச்சியின் விலை என்பது இயற்கை அழிப்பு என்கிற செய்கையின் மூலம்தான் என்பதை மனித குலம் இன்னும் உணரவில்லை. போக்குவரத்தின் விளைவாக நாம் இயற்கையை அதாவது நல்ல காற்று மண்டலத்தை சீரழித்து வருகிறோம். இந்த நிலைதான் இன்று எல்லாவற்றிருக்கும் அமைய பெற்றுள்ளது.

இயறகை சமன்பாடு என்பது இந்த உலகம் தோன்றிய காலம் தொட்டே அமைத்துள்ளது. ஆனால் அந்த சமன்பாட்டை மனித குலம் இன்றைக்கு கெடுத்து, சீரழித்து அடுத்த தலைமுறைக்கு என்று எதுவில்லாமல் செய்துள்ளது. அண்ட வெளியில் கூட கடந்த 60 ஆண்டுகளாக செலுத்தப்பட்ட செயற்கைகோள்கள் மிதந்து வருகிறது. அதாவது மனித குல வளர்ச்சி இன்றைக்கு தான் வாழும் பூமியை தாண்டி விண்வெளியினை மாசுபடுத்தும் அளவு வளர்ந்துவிட்டது. இன்னும் இருபது ஆண்டுகளில் அண்டவெளி முழுவதும் கைவிடப்பட்ட செயற்கை கோள்கள் மற்றும் அங்கு அமைக்கபட்ட விண்வெளி மிதக்கும் மையங்களால் நிரம்பியிருக்கும் என்பது உண்மை.

உலகில் உள்ள மூன்றில் இரண்டு பங்கு மக்கள் இன்றைக்கு கிராமங்கள் அல்லாத இடங்களில் வசிப்பதாக உள்ளது. இந்த அளவு என்பது இயற்கை சமன்பாட்டை மாற்றும் வலிமைமிக்கது. அதே போல இன்றைக்கு மூன்றில் இரண்டு பங்கு மக்கள் நுகர்வு கலாச்சாரத்தை அடிப்படையாக கொண்ட முதலாளித்துவ நாடுகளில் வசித்துவருகிறார்கள். இந்த நாடுகள் அனைத்தும் இயற்கையை காக்கும் விவசாயத்தை கைவிட்டு வருகிறார்கள் என்பதும் உண்மை. விவசாயத்தின் மீதான மானிய குறைப்பு என்பது இந்த நாடுகளில் அதிகமாக உள்ளது. இதன் தாக்கம் என்பது பொருளாதார அழுத்தம் என்பதை தாண்டி, இயற்கை சமன்பாடில்லாமல் விளை நிலங்கள் அனைத்தும் தொழில் நிலங்களாக மாற்றம் பெற வைக்கும். இது இயற்கை வளத்தை அடியோடு அழிக்கும் முயற்சியாகும்.

நுகர்வு கலாச்சாரத்தை மையபடுத்தியே இன்றைய பொருளாதாரத்தை வளரும் நாடுகள் கொண்டுள்ளன. அந்த வகையில் இந்தியா போன்ற நாடுகளில் விளை நிலங்கள் அனைத்தும் வணிக நோக்கில் மாற்றப்பட்டு தொழில் நிலங்களாக அசுர வேகத்தில் மாற்றம் பெற்று வருகிறது. இது இன்னும் சில ஆண்டுகளில் மனிதன் உணவுக்காக போராடும் நிலையினை கொண்டுவந்து தரும் என்பது உண்மை.

இயற்கை மாசுபாடு மற்றும் அழித்தல் என்பது பூமியை மட்டுமில்லாது பூமியுடன் பிணைந்துள்ள மற்ற இயற்கை செல்வமான நீரையும் அழிப்பதும் ஒன்றாகும். நீரானது பூமியுடன் ஒன்றியுள்ள குளம், ஆறு மற்றும் கடலில் உள்ளது போக நிலத்தின் உள்ளேயும் உள்ளது. இரண்டு வகையாகயான நீரையும் (இயற்கை) நாம் நம்முடைய சம காலத்தில் அழித்துவருகிறோம். நிலத்திற்க்கு மேல் உள்ள கடலை குப்பைகளாலும், கழிவு நீராலும் மனித குலம் அழித்து வருகிறது. இந்த நிலை இன்னும் தொடர்ந்தால் கடல் நீரானது விஷமாக மாறி அங்கு உயிர் வாழும் கடல் வாழ் உயிரனங்கள் அனைத்தும் மெல்ல அழிந்துவிடும். இது தவிர நிலத்தின் மீதான அனைத்து கழிவுகளும் இறுதியில் சங்கமம் அடைவது கடலில்தான் என்கிறது ஒர் ஆய்வு. நிலத்திற்க்கு உள்ளே நிலத்துடன் ஒன்றி இருக்கும் நிலத்தடி நீர் என்பது இன்றைக்கு அடி ஆழம் வரை சென்றதோடில்லாமல் அந்த நீரும் மாசடைந்து நிறம் மாறி பெறப்படுகிறது. இது இன்னும் சில ஆண்டுகளில் மனித குலம் உபயோகப்படுத்தாத நிலைக்கு கொண்டு சென்றுவிடும் என்பதும் உண்மை. தண்ணீருக்காவும், உணவுக்காகவும் இந்த உலகில் போர் முழும் நாள் வெகு தொலைவில் இல்லை.

மேலே சொன்ன நிலைகள் எல்லாம் வரும் காலங்களில் இன்னும் கடினம் ஆகும் என்பதே உண்மை. நாகரிகத்தின் தொடுவான உச்சியில் இருக்கும் மனித குலம் செய்த தவறுகளும் பாவங்களும் அது மனித குலம் பெற்று இருக்கும் வளர்ச்சியுடன் ஒப்பிட்டு நோக்கினால் புலப்படுவது ஒன்றுதான். ஆம், நாகரிக வளர்ச்சி என்பது இயற்கையின் அழித்தல் ஒன்றை கொண்டே முடியும் என்பதாகும். இது நல்லதா கெட்டதா என்பதல்ல நம் விவாதம், கண்டிப்பாக இது மனித குலம் தன் மீதான சுய அழித்தல்தான் இது. ஆனால் இது எதுவரை செல்லும் என்பதே கேள்வி?

3 comments:

  1. நாம் கவலையின்றி இயற்கையை சீரழிக்கிறோம் .. விதைத்ததை அறுவடை செய்யும் நாள் வெகு தூரத்தில் இல்லை..

    ReplyDelete
  2. @கே.ஆர்.பி.செந்தில்

    இந்த பிரபஞ்சத்தின் தற்போதைய முழு முதல் சுயநலவாதிகள் நம் தலைமுறையினர்தான் என்பது என் கருத்து. இன்னும் சில ஆண்டுகளில் மூன்று வேளையும் மூன்று விதமான மாத்திரைகளை விழுங்கித்தான் நாம் வாழ போகிறோம்.

    ReplyDelete