Wednesday, December 8, 2010

வடமுகங்களால் நிறையும் தென் இந்தியா

சமீப காலங்களாக தமிழகம் முழுவதும் பொது இடங்களில் நாம் ஒரு மாற்றத்தை காண்கிறோம். அந்த மாற்றமானது முக மாற்றம் ஆகும். பொது இடங்களில் நாம் முன்பு கண்டு வந்த தினக்கூலிகள், தொழிலாளர்கள் அனைவரும் வட இந்தியர்களாக மாறி வருவதுதான். முன்பு சிற்சில இடங்களில் பணி புரிந்து வந்த வட இந்தியர்களால் நிரம்பியுள்ளது. பெரும்பாலும் தொழிலாளர்களாகதான் இவர்கள் தென்படுகிறார்கள். பெரும் உணவகங்கள், மருத்துவமனைகள், சுகாதார பணியிடங்கள், கட்டிட பணிகள், தொழிலகங்கள், முக்கியமாக உடலை வருத்தும் பணிகளில் இவர்கள்தான் தென்படுகிறார்கள்.

இந்த இடமாற்றம் முக்கியமாக பிகார், .பி போன்ற மாநிலங்களில் இருந்து இங்கு வருபவர்களால்தான் அதிகமாக உள்ளது. இந்திய பொருளாதாரத்தின் மிக முக்கிய நன்மை தராத பலன் என்னவென்றால் கட்டுபாடில்லாத, அமைப்பிற்க்கு உட்படாத, ஒழுங்கற்ற நகரமயமாதல் ஆகும். (இதுவே மற்ற மலைசார்ந்த வட மாநிலங்களில் நடப்பது வேறு, அங்கு மக்கள் இடம்பெயராமல் இந்திய அரசின் சீருடை அணிந்த கொலைகார படைகளை எதிர்த்து போரிட்டு வருகிறார்கள்). இந்த நகரமயமாதல் என்பது இன்றைக்கு தமிழகத்தில் தெற்கு மாவாட்டத்தில் இருந்து மேற்கு மாவட்டங்கள் மற்றும் சென்னை போன்ற பெருநகரங்களுக்கு மக்கள் இடம்பெயர்வதை குறைந்துள்ளதை காட்டுகிறது. இந்த குறைவு தென் மாவட்ட மக்கள் வசதியாக வாழ தொடங்கி விட்டதால் ஏற்பட்டதா என்றால் இல்லை. இந்த வட இந்திய முகங்களின் எண்ணிக்கை அதிகமானது எதனால் என்றால், தமிழகம் முழுவதும் விவசாய நிலங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு வியாபார நிலங்களாக அதாவது மனை நிலங்களாக ஆக்கப்பட்டுள்ளதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. நிலத்தை விற்று கிராம மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வருகிறார்கள். மேலும் வேலை வாய்ப்பு உறுதி திட்ட்த்தின் கீழ் ஆண்டிற்க்கு 100 நாட்கள் வீதம் வேலைக்கு சென்றால் வருடம் ரூ. 10,000/- கிடைக்கிறது. அரிசி கிலோ 1 ரூபாய் வீதம் 20 கிலோவிற்க்கு ஆண்டிற்க்கு ரூ 240-ல் அரிசி கிடைக்கிறது உண்ண அது போதும். புத்துணர்வுக்கு ஊருக்கு ஒராயிரம் டாஸ்மாக் மதுகடையும், உலகை கண்டுகளிக்க அரசு தொலைக்காட்சியும் இருக்கிறது. நிலைமை இவ்வாறு இருக்க ஏன் பொருள் தேடி சென்னைக்கும், கோவைக்கும், திருப்பூருக்கும் செல்ல வேண்டும் என்ற எண்ணம்தான் இன்று வட இந்திய முகங்கள் இங்கு அதிகம் தென்பட காரணம் ஆகும்.

ஏற்கனவே இங்கு வேலை செய்யும் சொந்த மாநிலத்தவர்கள் தங்கள் உரிமைகளை வென்றெடுக்க கடும் போராட்டம் நிகழ்த்த வேண்டியுள்ள நிலையில் இந்த வட இந்தியர்கள் தங்கள் தொழிலாளர் நலன்களை யாரிடம் கேட்டு பெறுவர் அல்லது இவர்களுக்குகாக யார் குரல் கொடுப்பார்கள் என்பது அவசியம் பதில் தெரியவேண்டிய கேள்வி. ஒரு சின்ன உதாரணம், இன்று சென்னையில் கட்டப்பட்டு வரும் புதிய தலைமை செயலகம் முழுவதும் வட இந்திய தொழிலாளர்களால்தான் கட்டப்பட்டு வருகிறது. இந்த வேலையில் ஈடுபட்டு சில தொழிலாளர்கள் விபத்தில் உயிரையும் இழந்துள்ளனர். இவர்களில் யாராவது ஒருவர்க்காவது தொழிலாளர் நலன் குறித்தான உரிமைகள் தெரியுமா? அல்லது இவர்களுக்கு என்ன வகையான தொழிலாளர் நல உரிமைகள் அளிக்கப்படுள்ளது அல்லது உறுதி செய்யப்பட்டுள்ளது? இது எதுவுமே யாருக்கும் தெரியாது. இந்த மாநிலத்தின் நேரடி தொழிலாளர்களாக கருதப்பட வேண்டியவர்கள் அவர்கள் என்பது உண்மை. ஆனால் நடப்பது என்ன இன்னமும் கட்டிமுடிக்கபடாத அந்த கட்டிடத்திற்க்கு திறப்பு விழா நடந்து அதை கட்டிய தொழிலாளர்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்து ஆட்சியாளர்கள் கொண்டாடியதுதான் மிச்சம். இறந்து போன தொழிலாளர் குடும்பத்திற்க்கு அளிக்கப்பட்ட நிவாரணம் என்ன? வெறும் ரணம்தான் இம்மாதிரியானவர்களுக்கு கிடைக்கும் நிவாரணம் ஆகும்.

இன்னும் ஒரு முக்கிய நிலையில் இந்த வட இந்தியர்கள் பெருகி வருகின்றனர். எஞ்சி உள்ள விவசாய நிலங்களில் இவர்கள் தொழிலாளர்களாகவும் உழைத்துவருகின்றனர். நாள் முழுவதும் உழைக்கும் இவர்களுக்கு உழைப்புக்கு ஏற்ற ஊதியம் தரப்படுகிறதா எனபதும் சந்தேகமே? ஏன் என்றால் விவசாய கூலியாக இன்றைக்கு நம் மாநிலத்தவர்கள் யாரும் வர தயாராக இல்லை. எனவே இவர்களை விவசாய கூலிகளாக பயன் படுத்துவோர் நியாயமான கூலியை தருகிறார்களா என்று உறுதி சொல்ல யாரும் இல்லை. இது தவிர திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் இவர்கள்தான் தற்போது கடும் உழைப்பை தர வேண்டிய சாய தொழிற்சாலைகளில் பணி புரிந்து வருகின்றனர். குறைந்த்து 15 மணி நேரம் இவர்கள் ஷிப்ட் முறைகளில் கசக்கி பிழியப்படுகின்றனர். மனித தன்மை அற்ற சில நிறுவன்ங்களில் கொத்தடிமைகளாக இவர்கள் பணிபுரியும் அவலவும் நிலவுகிறது. மனிதன் வாழும் நிலைகளில் அல்லாத சுகாதார கேடான இருப்பிடம், கழிப்பிடம் மற்றும் இவர்களுக்கான உணவு தயாரிப்பு என்று அனைத்தும் தரப்படுகிறது. மேலும் இவர்களில் சிலர் நடத்தும் திருட்டு போன்ற சமூக குற்றங்களால் தங்கள் மாநிலத்தை சேர்ந்த அனைவரையும் சிக்கலில் ஆழ்த்துகின்றனர். இதற்கு தீர்வு காண வேண்டியவர்கள் யார்?

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று உரைத்த நம் முன்னோர்கள் வாக்கிற்க்கு ஏற்ப நாம் திரைகடல் ஓடியும் திரவியம் தேடினோம். ஆனால் இன்று திரவியம் தேடாமல் வாழ்வில் பசிக்கு உணவு தேடத்தான் இவர்கள் இடம் பெயர்கிறார்கள். இவர்கள் இங்கு வந்து வாழ்வாங்கு வாழ்ந்து நம்மை ஆள போவது இல்லை. ஆனால் இவர்கள் ஒரு கண்ணியமான உழைத்து வாழ நினைக்கும் மக்கள். நாமே இவர்கள் தற்போது செய்யும் வேலையை முன்பு நாம் செய்தோம் என்பதை மறந்து முதலாளிகள் ஆகிவிட்டோம். இது வரலாறு நமக்கு கற்று தந்துள்ள மோசமான பாடங்களில் ஒன்றாகும்.

இந்த இடமாற்றம் இந்த சமூகத்தை எப்படி மாற்ற போகிறது என்று யாரும் எண்ணுவதாக காணோம். முக்கியமாக இந்த விஷயத்தில் ஏற்பட போகும் சமூக கலாச்சார மாற்றம் ஒர் எல்லைக்கு அப்பால் கண்டிப்பாக சிற்சில சீரழிவையும், மொழி வேற்றுமையையும் உண்டாக்கும். அந்த நிலை வராமல் தடுக்க வேண்டும் என்றால் மக்களின் மனங்களில் மாற்றம் உண்டாக வேண்டும். உலகமயமாக்கலின் ஒர் விளைவே இது. பல்வேறு வேறுபட்ட கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்ளக்கூடிய பன்முகதன்மை வாயந்த சமூகமாக நாம் மாறவிட்டால் இது கண்டிபாக ஒரு சமூக பிரச்சனையாக உருவெடுக்கும். நம் மனங்களை மாற்றாவிட்டால் சமூக மாற்றங்கள் நமக்கு இனிக்காது. செய்வோமா நாம்?


Tuesday, December 7, 2010

மனித நுகர்வும், இயற்கை வள இழப்பும்

மனிதன் நாகரிக வளர்ச்சி அடைய தொடங்கி இன்றைக்கு பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. இந்த வளர்ச்சி என்பது கடந்த 3 நூற்றாண்டுகளில் பல மடங்கு அதிகரித்துள்ளது என்பது உண்மை. அறிவியல் வளர்ச்சியின் தொடக்கம் என்பது 18 நூற்றாண்டின் தொடக்கம் தொட்டு இன்று வரை மனிதன் நினைத்துதிராத அளவு வளர்ந்துவிட்டது. இந்த வளர்ச்சியின் விலை என்ன என்று இன்றுவரை மனிதன் அதிகமாக உணரவில்லை என்பதே உண்மை.

மனித நாகரிக மற்றும் அறிவியல் வளர்ச்சி இயற்கையின் விலையால் (அழிவால்) அமைய பெற்றது என்பதை இன்று நாம் அதிகமாக உணரவில்லை. அறிவியல் வளர்ச்சியின் ஊடாக இன்று நாம் பெற்று உள்ள போக்குவரத்து நிலை என்பது மனிதன் நினைத்த நேரத்தில் வேண்டிய இடத்திற்க்கு நம்மை இட்டு செல்ல முடியும். ஆனால் இந்த வளர்ச்சியின் விலை என்பது இயற்கை அழிப்பு என்கிற செய்கையின் மூலம்தான் என்பதை மனித குலம் இன்னும் உணரவில்லை. போக்குவரத்தின் விளைவாக நாம் இயற்கையை அதாவது நல்ல காற்று மண்டலத்தை சீரழித்து வருகிறோம். இந்த நிலைதான் இன்று எல்லாவற்றிருக்கும் அமைய பெற்றுள்ளது.

இயறகை சமன்பாடு என்பது இந்த உலகம் தோன்றிய காலம் தொட்டே அமைத்துள்ளது. ஆனால் அந்த சமன்பாட்டை மனித குலம் இன்றைக்கு கெடுத்து, சீரழித்து அடுத்த தலைமுறைக்கு என்று எதுவில்லாமல் செய்துள்ளது. அண்ட வெளியில் கூட கடந்த 60 ஆண்டுகளாக செலுத்தப்பட்ட செயற்கைகோள்கள் மிதந்து வருகிறது. அதாவது மனித குல வளர்ச்சி இன்றைக்கு தான் வாழும் பூமியை தாண்டி விண்வெளியினை மாசுபடுத்தும் அளவு வளர்ந்துவிட்டது. இன்னும் இருபது ஆண்டுகளில் அண்டவெளி முழுவதும் கைவிடப்பட்ட செயற்கை கோள்கள் மற்றும் அங்கு அமைக்கபட்ட விண்வெளி மிதக்கும் மையங்களால் நிரம்பியிருக்கும் என்பது உண்மை.

உலகில் உள்ள மூன்றில் இரண்டு பங்கு மக்கள் இன்றைக்கு கிராமங்கள் அல்லாத இடங்களில் வசிப்பதாக உள்ளது. இந்த அளவு என்பது இயற்கை சமன்பாட்டை மாற்றும் வலிமைமிக்கது. அதே போல இன்றைக்கு மூன்றில் இரண்டு பங்கு மக்கள் நுகர்வு கலாச்சாரத்தை அடிப்படையாக கொண்ட முதலாளித்துவ நாடுகளில் வசித்துவருகிறார்கள். இந்த நாடுகள் அனைத்தும் இயற்கையை காக்கும் விவசாயத்தை கைவிட்டு வருகிறார்கள் என்பதும் உண்மை. விவசாயத்தின் மீதான மானிய குறைப்பு என்பது இந்த நாடுகளில் அதிகமாக உள்ளது. இதன் தாக்கம் என்பது பொருளாதார அழுத்தம் என்பதை தாண்டி, இயற்கை சமன்பாடில்லாமல் விளை நிலங்கள் அனைத்தும் தொழில் நிலங்களாக மாற்றம் பெற வைக்கும். இது இயற்கை வளத்தை அடியோடு அழிக்கும் முயற்சியாகும்.

நுகர்வு கலாச்சாரத்தை மையபடுத்தியே இன்றைய பொருளாதாரத்தை வளரும் நாடுகள் கொண்டுள்ளன. அந்த வகையில் இந்தியா போன்ற நாடுகளில் விளை நிலங்கள் அனைத்தும் வணிக நோக்கில் மாற்றப்பட்டு தொழில் நிலங்களாக அசுர வேகத்தில் மாற்றம் பெற்று வருகிறது. இது இன்னும் சில ஆண்டுகளில் மனிதன் உணவுக்காக போராடும் நிலையினை கொண்டுவந்து தரும் என்பது உண்மை.

இயற்கை மாசுபாடு மற்றும் அழித்தல் என்பது பூமியை மட்டுமில்லாது பூமியுடன் பிணைந்துள்ள மற்ற இயற்கை செல்வமான நீரையும் அழிப்பதும் ஒன்றாகும். நீரானது பூமியுடன் ஒன்றியுள்ள குளம், ஆறு மற்றும் கடலில் உள்ளது போக நிலத்தின் உள்ளேயும் உள்ளது. இரண்டு வகையாகயான நீரையும் (இயற்கை) நாம் நம்முடைய சம காலத்தில் அழித்துவருகிறோம். நிலத்திற்க்கு மேல் உள்ள கடலை குப்பைகளாலும், கழிவு நீராலும் மனித குலம் அழித்து வருகிறது. இந்த நிலை இன்னும் தொடர்ந்தால் கடல் நீரானது விஷமாக மாறி அங்கு உயிர் வாழும் கடல் வாழ் உயிரனங்கள் அனைத்தும் மெல்ல அழிந்துவிடும். இது தவிர நிலத்தின் மீதான அனைத்து கழிவுகளும் இறுதியில் சங்கமம் அடைவது கடலில்தான் என்கிறது ஒர் ஆய்வு. நிலத்திற்க்கு உள்ளே நிலத்துடன் ஒன்றி இருக்கும் நிலத்தடி நீர் என்பது இன்றைக்கு அடி ஆழம் வரை சென்றதோடில்லாமல் அந்த நீரும் மாசடைந்து நிறம் மாறி பெறப்படுகிறது. இது இன்னும் சில ஆண்டுகளில் மனித குலம் உபயோகப்படுத்தாத நிலைக்கு கொண்டு சென்றுவிடும் என்பதும் உண்மை. தண்ணீருக்காவும், உணவுக்காகவும் இந்த உலகில் போர் முழும் நாள் வெகு தொலைவில் இல்லை.

மேலே சொன்ன நிலைகள் எல்லாம் வரும் காலங்களில் இன்னும் கடினம் ஆகும் என்பதே உண்மை. நாகரிகத்தின் தொடுவான உச்சியில் இருக்கும் மனித குலம் செய்த தவறுகளும் பாவங்களும் அது மனித குலம் பெற்று இருக்கும் வளர்ச்சியுடன் ஒப்பிட்டு நோக்கினால் புலப்படுவது ஒன்றுதான். ஆம், நாகரிக வளர்ச்சி என்பது இயற்கையின் அழித்தல் ஒன்றை கொண்டே முடியும் என்பதாகும். இது நல்லதா கெட்டதா என்பதல்ல நம் விவாதம், கண்டிப்பாக இது மனித குலம் தன் மீதான சுய அழித்தல்தான் இது. ஆனால் இது எதுவரை செல்லும் என்பதே கேள்வி?

Friday, July 2, 2010

பெட்ரோலால் எரியும் அரசியல்

கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய அரசு அறிவித்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை எதிர் அணியில் உள்ள அனைத்து கட்சிகளும் பாகுபாடு இல்லாமல் எதிர்த்து வருவது நம் அறிந்ததே.

இந்த நிலையில் மத்திய அரசுக்கு எதிராக வரும் 5 திகதி அறிவிக்கப்பட்டு உள்ள நாடு தழுவிய வேலை நிறுத்ததிற்க்கு அனைத்து எதிர் அணி கட்சிகள் மட்டும் இல்லாமல் பொது மக்களும் ஆதரவு தெரிவித்து வேலை நிறுத்ததை வெற்றி அடைய வைக்க வேண்டும்.

முதலாவதாக இந்த உயர்வை தவிர்த்து இருக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது, அரசு சொல்லும் காரணமான இந்த விலை உயர்வு சர்வதேச சந்தையில் எற்ப்பட்ட உயர்வை கொண்டே எடுக்கப்பட்ட முடிவு என்பது சற்றே எற்புடையதாக இருந்தாலும் ஏன் இந்தியாவில் மட்டும் எரிபொருள் விலை இந்த அளவு உள்ளது என்பதை அதிகமாக உணர்ந்தவர் யாரும் இல்லை.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை அதிகபட்சமாக பீப்பாய் ஒன்றுக்கு 77 அமெரிக்க டாலராக உள்ளது. இது 159 லிட்டர் கச்சா எண்ணெயின் அளவாகும். டாலர் ஒன்றுக்கு 50 ரூபாய் விதம் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை ரூ.3850/-. சராசரி ஒரு லிட்டர் கச்சா எண்ணெயின் விலை ரூ 24.50/- மட்டுமே. இதன் பிறகான சுத்திகரிப்பு மற்றும் தரம் பிரித்தல் ஆகியன ரூ.6.50/- அதிகபட்சமாக செலவாகும். மொத்தம் ரூ.31 ஒரு லிட்டர் பெட்ரோல் விலை. ஆனால் சந்தையில் நாம் செலுத்தக்கூடிய விலை குறைந்தபட்சம் ரூ.55/-.
சுமார் ரூ.24/- விதம் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு இந்திய அரசுக்கு வரி வருவாயாக செல்லுகிறது.
இந்த வரி அளவை குறைப்பது பற்றி இந்திய அரசு இதுவரை கருத்தில் எடுத்துக்கொண்டதாக தெரியவில்லை. ஆனால் இந்த 24 ரூபாயில் மாநில அரசின் விற்பனை வரியும் அடங்கியுள்ளது. இது 90% மத்திய அரசின் கையில் உள்ள விவகாரம் என்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்ததாக தெரியவில்லை. இன்றும் எப்போதும் போல மாநில அரசுகள் விற்பனை வரியை குறைக்க வேண்டும் என்றே பெட்ரோலிய அமைச்சர் சொல்லி வருகிறார். உண்மை இவ்வாறு இருக்க மத்திய அரசும் சரி, அதனுடன் கொள்(ளை)கை கூட்டணி வைத்து இருக்கும் மாநில அரசுகளும் சரி இந்த வியசத்தில் இரட்டை வேடம் கொண்டு பேசுகின்றன.

இரண்டாவதாக, பெட்ரோல் மீதான அரசின் விலைகட்டுப்பாட்டையும் அரசு தளர்த்தி இப்போது ஆயில் தயாரிக்கும் நிறுவனங்கள் தங்கள் இஷ்ட்டப்படி விலையை நிர்ணயித்து கொள்ளவும் அனுமதி அளித்துள்ளது. இந்த நடவடிக்கை கண்டிப்பாக எந்தவித பலன்களையும் சாமனியனுக்கு வரும்காலத்தில் தரப்போவது இல்லை. பெட்ரோல் பொருள் மீதான விலை நிர்ணையம் என்பது இன்று வரை அரசின் மறைமுக மற்றும் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளதை இப்போது அரசு தாரைவார்த்துள்ளது.

இதன் மூலம் எண்ணெய் நிறுவனங்கள் தங்களுக்கு எற்படும் இழப்பை சரிக்கட்ட விலையை உய்ர்த்தி சரிபடுத்திகொள்ள அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் மீதான அரசின் பிடியில் இருந்து மூழுவதுமாக விடுபடுவது மற்றும் இன்றி சர்வதேச எண்ணெய் விலையின் ஏற்ற இறக்கங்களில் மீது ஏற்ப்படும் லாபத்தில் ஒரு மிக பெரும் பகுதியை அடைய போகிறது. எண்ணெய் நிறுவனங்களூக்கு இது ஒரு போனஸாக கிடைக்க போகிறது.

இந்த முடிவானது, இந்திய எண்ணெய் நிறுவனங்களின் லாபத்தை உயர்த்த போவது என்னவோ உண்மை. அதே நேரம் ஒரு விஷயத்தை உற்று நோக்க வேண்டும் அதிமுக்கிய 4 எண்ணெய் நிறுவனங்களில் அதிகபட்ச பங்குகள் இந்திய அரசால் கைகொள்ளப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் ஈட்டும் லாபமானது இந்திய அரசுக்கு வட்டியாகவும், டிவிடண்டாகவும் சென்றடைகிறது. எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டம் குறையுமேயானால் (லாபம் அதிகமானால்) அது இந்திய அரசுக்குத்தான் நன்மை. சாதாரணமானவர்களுக்கு எந்த நன்மையும் இல்லை. அதேவேளையில் கட்டுப்பாடற்ற விலை நிர்ணையம் என்பது இந்த 4 நிறுவனங்களை தவிர்த்து எஸ்ஸார், ரிலையன்ஸ், ஷெல் போன்ற எண்ணெய் உற்பத்தி மற்றும் சில்லறை விற்பனை நிறுவனங்களுக்கு கொள்ளை லாபத்தை அளிக்க போகிறது. இது ஒரு வகையில் இந்த தனியார் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களுக்கு தரப்பட்டுள்ள மறைமுக சலுகை (வழமை போலவே இதற்காக இந்த தனியார் எண்ணெய் நிறுவனங்கள் எவ்வளவு கையூட்டு அளித்தன என்பது தெரியவில்லை) இதன் மூலம் விளங்குவது என்னவென்றால், இந்த விலை உயர்வு அரசுக்கும் தனியார் எண்ணெய் நிறுவனங்களூக்கும் கொளுத்த லாபம் என்பதே ஆகும்.



எண்ணெய் விலை உயர்வையும் அதன் அரசியலையும் தவிர்க்க என்ன வழி?

1. மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் அனைத்தும் பொதுத்துறை நிறுவனங்கள் என்ற நிலையை மறந்து மத்திய அரசைவிட வேகமாக சந்தை பொருளாதார கூறான லாபம் ஒன்றே என்ற நிலையை கைவிட வேண்டும். அதற்கு முதலாவதாக ”நிர்வகிக்கப்பட்ட விலை நிர்ணையமுறை” அதாவது பெட்ரோல் விலை சுயநிர்ணைய முறையை திரும்ப பெற மத்திய அரசு முன் வர வேண்டும். ஒரு முறை லாபம் பார்க்க தொடங்கிவிட்டால் இந்த நிறுவனங்கள் கண்டிப்பாக கவனிக்க வேண்டியவர்களை கவனித்து இந்த சுய விலை நிர்ணைய முடிவை வாபஸ் பெற விடமாட்டார்கள் என்பதே உண்மை.

2. கச்சா எண்ணெய் மீதான உற்பத்தி வரியை மறுபரீசிலனை செய்து தற்போது உள்ள வரி விகித்ததை குறைக்க வேண்டும்.

3. மாநில அரசுகள் அனைத்தும் ஒரே விதமான விற்பனை வரி விகிதத்தை கையாள மத்திய அரசு உத்தரவிட வேண்டும்.

4. பெட்ரோல் விலை மீதான பரிசீலனை ஒவ்வொரு 3 மாத்திற்க்கு ஒரு முறை நடைபெற வேண்டும். எதேதெற்கோ கூடும் மத்திய அமைச்சரவை இதற்கு ஒரு முறை கூடினால் ஒன்றும் தப்பில்லை.

5.தனியார் நிறுவனங்கள் தங்கள் பெட்ரோல் மீதான விலையை சந்தை விலையை விட குறைவாக/அதிகமாக விற்க அனுமதிக்க வேண்டும். அவ்வாறு அனுமதித்தால் கண்டிப்பாக உண்மை விலையில் அவர்கள் விற்க முன்வருவார்கள். (ரிலையன்ஸின் முடிகிடந்த பங்குகள் இன்று மீண்டும் திற்ந்திருப்பதே சாட்சி)

இன்றைய இந்திய அரசு பணவீக்கத்தை கட்டுப்படுத்த தெரியாமல் திக்கு தெரியாத காட்டில் வழிமாறிய வழிபோக்கனை போல உள்ளது. எண்ணெய் விலை உயர்வானது பணவீக்கத்தை உயர்த்துவதோடு இல்லாமல் சாமானிய மக்களின் வாங்கும் சக்தியையும் குறைத்துவிடுகிறது. இதன் மூலம் உற்பத்தி துறை சற்றே சுணக்கம் காணலாம் அதனுடாக பொருட்களின் விலை மீண்டும் அதிகமாக வாய்ப்பு உள்ளது. எனவே மத்திய அரசு வரும் 5 தேதி நடைபெற உள்ள விலையுர்வுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை எதிர்கட்சிகளின் மற்றும் ஒரு சம்பரதாயமாண நிகழ்வாக கொள்ளகூடாது. ஏன் என்றால் மக்கள் விழிப்புணர்வு பெற தொடங்கிவிட்டார்கள். அவ்வாறன விழிப்புணர்வு ஆட்சியாளர்களுக்கு வேறு வழிகளில் துன்பத்தைதரும் என்பதே உண்மை. அதற்கு இன்றைய நிதர்சன உதாரணம் இரண்டு நாட்களுக்கு முன் நடந்த மாவோயிஸ்ட்கள் தாக்குதலில் 26 படைவீரர்கள் பலி.

ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டிய நேரமிது..